பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர், ஆசிரியர் விகிதத்தை நிர்ணயிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள், 7260 நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லை. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 150க்கு மேல் மாணவர்கள் கொண்ட துவக்க பள்ளிகள், 100க்கு மேல் மாணவர்கள் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு (6 முதல் 8 வது வகுப்புவரை) பொறுப்பு ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லாத ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியர்கள் பணியிடம் சட்டப்படி தேவையற்றது. அவர்களை தேவையான பள்ளிகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், போதிய மாணவர்கள் இல்லாத அதே பள்ளிகளில் தொடர தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது. இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அரசு ரூ.33 கோடியை ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்குகிறது.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மாணவர், ஆசிரியர் விகிதத்தை பள்ளிக் கல்வித்துறை நிர்ணயிக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக பொறுப்பு ஆசிரியர்களை தொடர அனுமதிக்கிறது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்ணயிக்க வேண்டும். கூடுதலாக உள்ள ஆசிரியர்களை தேவையான ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல மனுவாக கருத முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement