'கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை'

மங்களூரு: ''யாருக்கும் யாரையும் கொல்லும் அதிகாரம் இல்லை. சமரசத்துக்காகவே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை, தேசிய புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பதா, வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்த விசாரணை நடந்தாலும், எனக்கு ஆட்சேபம் இல்லை.

குற்றத்தில் தொடர்புள்ளவர்களை கைது செய்யும்படி, ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். யாருக்கும் யாரையும் கொல்லும் அதிகாரம் இல்லை. கொலையாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். கொலை நடந்தபோது, பதற்றமான சூழ்நிலை இருந்தது.

அந்த நேரத்தில் என் மாவட்டத்தில், மதக்கலவரம் ஏற்படாமல், அமைதியை நிலைநாட்டுவதே எனக்கு முக்கியமாக இருந்தது. எனக்கு எந்த தகவல் கிடைத்தாலும், பொது மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொலை வழக்கு தொடர்பாக, போலீசார் சிலரை கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

எனவே விசாரணை நடத்தட்டும். எனக்கு எதிராக பேசுவோர் பற்றி, நான் எதுவும் கூறமாட்டேன். கடவுள் மற்றும் கடவுளை போன்ற என் தொகுதி மக்கள் இருக்கும் வரை, எதை பற்றியும் கவலைப்படமாட்டேன்.

திருமணம், கிரிக்கெட் போட்டிகள், உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஆனால் நான் முக்கியமான பணிகளில் இருப்பதால், சில கிரிக்கெட் போட்டிகளில் நான் பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தை அரசியலாக்குகின்றனர்.

எனக்கு அரசியல் முக்கியம் அல்ல. தொகுதி வளர்ச்சியே முக்கியம். அதிக முதலீடுகள் கிடைக்க வேண்டும். எங்கள் மாவட்ட வளர்ச்சியை, யாரும் திசை திருப்ப கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement