பிரிமியர் தொடர்: மே 17ல் துவக்கம்

புதுடில்லி: பிரிமியர் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வரும் மே 17ல் துவங்குகின்றன.

இந்தியாவில், பிரிமியர் லீக் கிரிக்கெட் 18வது சீசன் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக இத்தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், மீண்டும் போட்டிகளை நடத்திட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது. நேற்று, புதிய அட்டவணை வெளியானது.

மொத்தம் 17 போட்டிகள், பெங்களூரு, ஜெய்ப்பூர், டில்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் என 6 இடங்களில் நடக்கவுள்ளது. வரும் மே 17 ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப், டில்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, மே 24ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது.
தகுதிச் சுற்று-1, 'எலிமினேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் முறையே மே 29, 30, ஜூன் 1ல் நடக்கும். பைனல், ஜூன் 3ல் நடக்கவுள்ளது. இந்த நான்கு போட்டிகளுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

Advertisement