கட்டுமான பொறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
சேலம்,:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், மாநில அளவில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்துடன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சேலம், கோட்டை மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் விஜயபானு தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த, 2024 பிப்ரவரியில், ஒரு யூனிட் மணல், 2,500 ரூபாய்க்கு விற்றது, தற்போது 4,200 ரூபாயாகவும், எம்.சாண்ட், 3,000 ரூபாயில் இருந்து, 5,250 ரூபாய், பி.சாண்ட் 4,000 ரூபாயில் இருந்து, 6,300 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால் ஜல்லி, மணல் போன்ற கட்டுமான பொருட்களுக்கான செலவினம், 22லிருந்து, 40 சதவீதமாகவும், ஒரு சதுரடிக்கான கட்டுமான தொகை, 2,500 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக அதிகரித்து விட்டதால், மக்களும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களும் பாதிக்கப்பட்டு, கட்டுமான தொழில் நசியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.
கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில், கட்டுமான பொருட்களை சேர்த்தால் மட்டுமே, நியாயமான விலையேற்றம் இருக்கும். இது தொடர்பாக, அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு பேசினார்.
செயலர் பாஸ்கரன், பொருளாளர் அசோகன், சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் செல்வகுமார், கமல், செயஜ்குமார், சுபாஷ் உள்பட, 10 அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.