இ.பி.எஸ்., பிறந்த நாளுக்கு இனிப்பு; கரூர் தி.மு.க., கவுன்சிலர்கள் ஓட்டம்

4

கரூர் : கரூர் மாநகராட்சி கூட்டம் முடிந்ததும், பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இனிப்பு வழங்கியபோது, தி.மு.க., கவுன்சிலர்கள் வாங்காமல் ஓட்டம் பிடித்தனர்.


கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று மேயர் கவிதா தலைமையில் நடந்தது. இதில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ்குமார் பங்கேற்றனர்.


கூட்டம் முடியும் தருவாயில், அ.தி,மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்க அனுமதி கேட்டனர். இதற்கு, மேயர் கவிதா அனுமதி வழங்க மறுத்தார்.


அப்போது, 'முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பிறந்த நாள்களுக்கு மட்டும் இனிப்பு அளிக்கலாமா? எனக் கேட்டனர்.


'இது மாநகராட்சி கூட்டம்; எந்த விஷயம் என்றாலும், பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அந்த வகையில், உறுப்பினர் ஆதரவு இல்லாததால், பழனிசாமி பிறந்த நாளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என மேயர் கூறினார்.


இந்நிலையில், கூட்ட அறையில் இருந்து, மேயர் கவிதா உள்ளிட்ட தி.மு.க., கவுன்சிலர்களும், கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் வெளியே வந்தனர். அப்போது, லிப்ட் அருகில் நின்று கொண்டிருந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுரேஷ், தினேஷ்குமார் ஆகியோர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இனிப்பு வழங்கினர்.


ஆனால், இனிப்பை வாங்க மறுத்த தி.மு.க., கவுன்சிலர்கள், வேகமாக ஓடிச்சென்று இன்னொரு லிப்ட் வாயிலாக மாநகராட்சி கீழ் தளத்துக்குச் சென்று, நடையும் ஓட்டமுமாக வெளியேறினர். விடாத அ.தி.மு.க., கவுன்சிலர்களும், இனிப்புடன், தி.மு.க., கவுன்சிலர்களை பின்தொடர்ந்து சென்றனர்.

Advertisement