மூல வைகை ஆறு வறண்டதால் குடிநீர் உறை கிணறுகளுக்கு பாதிப்பு

கடமலைக்குண்டு : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின்றி மூல வைகையாறு வறண்டதால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து மூல வைகை ஆறாக வாலிப்பாறை, தும்மக்குண்டு, முறுக்கோடை, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு ஆகிய மலைக்கிராமங்கள் வழியாக துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் ஆகிய கிராமங்களை கடந்து வைகை அணையில் சேர்கிறது.

வருஷநாடு முதல் துரைசாமிபுரம் வரை உள்ள மணற்பாங்கான மூல வைகை ஆற்றில் பல இடங்களில் குடிநீர் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆற்றில் நீர் வரத்து ஏற்படும்போது குடிநீர் உறை கிணறுகளில் நீர் சுரப்பு அதிகமாகும். நீர் வரத்து குறைந்தால் நீர் சுரப்பும் குறைந்து விடும். கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கோடை மழையில் மூல வைகை ஆற்றில் தொடர்ந்த நீர் வரத்து, அடுத்தடுத்து மழை இல்லாததால் வறண்டு போனது.

இதனால் வைகை ஆற்றின் கரையில் உள்ள விவசாய பாசன கிணறுகள், போர்வெல்கள், குடிநீர் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில வாரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement