பழையசீவரத்தில் மூடியே கிடக்கும் இ - சேவை மையம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையசீவரம் கிராமம். இக்கிராமத்தில், பழையசீவரம், சங்கராபுரம், லிங்காபுரம், வரதாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன.

பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்காரபுரத்தில், 2013 - 14ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் செலவில் இ.-- சேவை மையம் கட்டப்பட்டது.

இதில், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா, சிட்டா மற்றும் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் உள்ளிட்ட, 'ஆன்லைன்' தொடர்பான அனைத்து பணிகளையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளளலாம் என, தெரிவிக்கப்பட்டதால் மிகவும் பயன்பாடாக இருக்கும் என கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இக்கட்டடம் பயன்பாட்டிற்கு விடாமல் மூடியே வைத்து வீணாகி வருவதால், ஊராட்சி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழையசீவரம் பகுதியினர் கூறியதாவது,

பழையசீவரத்தில் இ - சேவை மையம் கட்டடம் அமைத்தும் பயன்பாடு இல்லாததால், எங்களுக்கு தேவையான அனைத்து வகை சான்றுகள் மற்றும் சேவைகள் பெற வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகம் மற்றும் தனியார் மையங்களையே நாட வேண்டிய நிலை உள்ளது.

'ஆன்லைன்' தொடர்பான விண்ணப்பங்களுக்கு பயன்பாடு இல்லாத போதும், ஊராட்சிக்கான மற்ற தேவைக்காவது பயன்படும் வகையில் இக்கட்டடத்தை திறந்த செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement