பழவேரியில் குடியிருப்புகளில் குரங்குகள் அட்டகாசம்

காவணிப்பாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், திருமுக்கூடல், பழவேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியினர், தினசரி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடைகளில் மட்டுமே நோட்டமிட்டு, திண்பண்டங்களை துாக்கி சென்ற குரங்குகள், தற்போது வீடுகளில் புகுந்து அனைத்து உணவுப் பொருட்களையும் வாரி செல்வதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

காவணிப்பாக்கம் கிராமத்தினர் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளில் இப்பகுதிகளில் ஒன்றிரண்டு குரங்குகள் மட்டுமே ஊருக்குள் உலா வந்து கொண்டிருந்தது. தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் ஊரை சுற்றி வருகின்றன.

தென்னை மரங்களில் இளநீர் பறித்து குடிப்பதோடு, மனிதர்கள் மீது வீசுகிறது. வீட்டு தோட்டங்களில் உள்ள மாமரம், கொய்யா, பப்பாளி, வாழை மரங்களில் ஏறி பிஞ்சு, காய் என அத்தனையையும் சேதப்படுத்துகின்றன.

வீட்டை திறந்து வைத்தால் உள்ளே ஆட்கள் இருந்தாலும், வீட்டிற்குள் புகுந்து எவ்வகை உணவுகள் உள்ளதோ துாக்கி செல்கின்றன. இதனால், மதிய நேரத்தில் காற்று வாங்க கூட கதவு திறக்க முடியாமல் மூடி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

வீட்டு மின் இணைப்பு ஒயர்களை பிடித்து இழுத்து குரங்குகள் ஆட்டம் போடுவதால், ஒயர்கள் தாழ்வாக தொங்கி விடுகின்றன. முன்பெல்லாம் பட்டாசு சத்தம் கேட்டால் ஓடிய குரங்குகள் தற்போது அதற்கும் மசிவதில்லை.

எனவே, இக்கிராம பகுதிகளில் கூட்டம், கூட்டமாக வலம் வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement