ராமேஸ்வரம் இ சேவை மையத்தில் தடாலடி வசூலால் மக்கள் பாதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் ஆன்லைனில் சான்றிதழ், விண்ணப்பங்கள் பதிய தடாலடியாக வசூலிக்கின்றனர்.

ராமேஸ்வரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் தனியார் இ-சேவை மையங்கள் உள்ளது. இங்கு சான்றிதழ் மற்றும் அரசு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த குரூப்- 1, குரூப் -4 தேர்வுக்கு ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இவர்களிடம் அரசு தேர்வு கட்டணம் ரூ.100 சேர்த்து ஆன்லைனில் பதிவு செய்ய குரூப் -1க்கு ரூ.400ம், குரூப் -4க்கு ரூ.200 என தடாலடியாக வசூலிக்கின்றனர்.

மேலும் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் திருத்த விண்ணப்ப மனு இருப்பு இல்லை. இதனால் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்தில் ஒரு மனுவை ரூ.10க்கு விற்கின்றனர். ஒரு மனு அதிகபட்சமாக ரூ.4க்கு விற்கும் நிலையில் ஏன் கூடுதலாக விற்கிறீர்கள் என பயனாளிகள் கேட்டால், அப்படித்தான் விற்போம் என இ-சேவை உரிமையாளர்கள் அடாவடியாக கூறுகின்றனர்.

இதனால் மக்கள் பாதிக்கின்றனர். எனவே அடாவடியாக வசூலிக்கும் இ-சேவை மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

Advertisement