கோவை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தேவை 'தீவிர சிகிச்சை!' ; பணிச்சுமையில் டாக்டர்கள் அல்லல்

1

கோவை : கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், உதவி பேராசிரியர்கள் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது.

தமிழகத்தில், 39 அரசு மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதில், 35 கல்லுாரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியும் ஒன்று.

இங்கு பல்வேறு துறைகளில் பணியிடங்கள், இதுவரை உருவாக்கப்படவில்லை. உதாரணமாக, குழந்தைகள் நலத்துறையில், 8 உதவி பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

பிற மாவட்டங்களில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தும் பொழுது, காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால், கோவையில் பணியிடங்களே உருவாக்கப்படாத சூழலில், வகுப்பறை கற்றல், மருத்துவமனையில் செய்முறை கற்றல் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் என பல்வேறு பணிச்சுமைக்கு மத்தியில், தற்போதைய உதவி பேராசிரியர்களாக செயல்படும் டாக்டர்கள் திணறி வருகின்றனர். புதிய கல்லுாரிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், பழைய கல்லுாரிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை கையாள வேண்டிய சூழலில், பணியில் இருக்கும் டாக்டர்கள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். ஒருசிலர், வேறு அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் அளித்த நோட்டீஸ் குறித்து டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, '' நோட்டீஸ் பெறப்பட்டுள்ளது உண்மைதான். தமிழகம் முழுவதும் உள்ள பிரச்னை இது; கோவை கல்லுாரிக்கான சிக்கல் அல்ல. நோட்டீஸ் சார்ந்த தகவல் தொகுத்து, அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கவுள்ளோம்,'' என்றார்.

Advertisement