பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு; 286 வன ஊழியர்கள் பங்கேற்பு

கூடலுார் : முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 286 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய முதுமலை மசினகுடி வனகோட்ட வனப்பகுதியில் ஆண்டு தோறும் பருவ மழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

நடப்பு ஆண்டின் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. இதற்காக, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், 29 நேர்கோடு அமைத்து, 116 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மசினகுடி கோட்டத்தில், 42 நேர்கோடு அமைத்து, 170 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணியின் போது, நேரடி கணக்கெடுப்பு, கால் தடம் உள்ளிட்ட அடையாளங்கள், தாவரங்களை கணக்கெடுத்து, அதன் விபரங்களை மொபைல் செயலி, பதிவேடுகளிலும் தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து வருகின்றனர். இப்பணி, 22ம் தேதி நிறைவு பெறுகிறது.

வனத்துறையினர் கூறுகையில்,'பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணியில், அந்தந்த வனச்சரகர்கள் தலைமையில் மொத்தம், 286 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி, 22ம் தேதி வரை நடக்கிறது.

கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் வனவிலங்குகள் குறித்து விபரங்களின் அடிப்படையில், அறிவியல் முறையில் ஆய்வு மேற்கொண்டு வன விலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்.

Advertisement