துப்பாக்கி சூட்டில் திடீர் திருப்பம் ஜல்லி விழுந்து மொபைல் சேதமானது அம்பலம்

பரங்கிப்பேட்டை: பா.ஜ., பிரமுகர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக எழுந்த புகாரில் திடீர் திருப்பமாக சட்டை பாக்கெட்டில் ஜல்லி விழுந்ததில், மொபைல் போன் சேதமானது விசாரணையில் தெரியவந்தது.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரைச் சேர்ந்தவர் அஸ்கர் அலிகான், 53; பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட தயாரானார்.

அப்போது, மர்ம நபர்கள் ஏர்கன் மூலமாக சுட்டதில் பாக்கெட்டில் இருந்த செல்போன் உடைந்து சேதமானதாக தகவல் பரவியது. எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

அஸ்கர் அலிகான் வீட்டில் இருந்த 'சிசிடிவி', யின் ஹார்டு டிஸ்க் மற்றும் சேதமடைந்த மொபைல் போனை விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் ராஜூ ஆய்வு செய்ததில், குண்டு துளைத்து மொபைல் உடையவில்லை என்பது உறுதியானது.

மாறாக சிறிய கற்கள் பட்டு உடைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

விசாரணையில், 'அஸ்கர் அலிகான் வீட்டின் அருகில் 12 வயது சிறுவன் தினமும் மாலை கிரிக்கெட் பேட்டால் சிறிய கருங்கள் ஜல்லியை அடித்து விளையாடுவதும், சம்பவம் நடந்த அன்று அவ்வாறு விளையாடும் போது, அஸ்கர் அலிகான் பாக்கெட்டில் ஜல்லி விழுந்து மொபைல் போன் சேதமானதும், துப்பாக்கி சூடு எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது.

Advertisement