கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி: ரூ.79 லட்சத்தை இழந்த பெண்

தானே:கடந்த நான்கரை ஆண்டுகளில், கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்ய கவர்ந்திழுத்து, 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சம் ஏமாற்றி பேஸ்புக் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகானில் வசித்து வரும் 53 வயதான பெண்ணிடம் ஜூபர் ஷம்ஷாத் கான், என்பவர் பேஸ்புக் சமூகவலைதளம் மூலம நண்பராக அறிமுகமாகி உள்ளார். அந்த பழக்கத்தில் கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண், முதலில் ஒரு தொகையை முதலீடு செய்துள்ளார்.ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து, லாபம் பெற்றதால்,இது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மேலும் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று அந்த நண்பர் தெரிவித்ததால் , அந்த பெண் முதலீட்டை அதிகரித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதலீட்டிற்கான லாப தொகை வராததால், தனது முதலீடு செய்திருந்த மொத்த பணம் ரூ.79 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர், பணம் தராமல் ஏமாற்றினார். தான் ஏமாற்றப்பட்டு ரூ.79 லட்சத்தை இழந்த அந்த பெண், நவி மும்பையில் உளள கார்கர் போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து கார்கர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் அளித்த புகாரில், கடந்த 2020- அக்டோபர் முதல் மார்ச் 2025 வரை பல பரிவர்த்தனைகளில் 78 லட்சத்து 82 ஆயிரத்து 684 ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும். தனது முதலீட்டு பணத்தை மீட்டெடுக்க முயன்றபோது, குற்றம் சாட்டப்பட்ட ஜூபர் ஷம்ஷாத் கான் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததாகவும் குறிப்பிடிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்,பாரதீய நியாய் சன்ஹிதாவின் பிரிவுகள் 318(4) (மோசடி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கான் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

விசாரண நடந்து வருகிறது. மோசடி செய்த ஜூபர் ஷம்ஷாத் கானை தேடி வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

Advertisement