சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாணாபுரம் அடுத்த மேலத்தேனுார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார், 27; விவசாயி.

அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் தீபிகா,18; இந்த இருவருக்கும், இரு வீட்டார் சம்மத்துடன், கடந்தாண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது.

தீபிகா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தை வளர்ச்சி குறைபாடு காரணமாக கருக்கலைப்பு செய்தார். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் ராஜாமணி, திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தொடர்ந்து போலீசார், சதீஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிறுமியை திருமணம் செய்து வைத்த, பெற்றோர் உள்ளிட்ட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement