ஜெயமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடு

தேவதானப்பட்டி: சோத்துப்பாறை கூட்டு குடிநீர் 10 நாட்களாக வினியோகம் செய்யாததால் ஜெயமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் ஊராட்சியில் 9 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வராகநதியில் 12 போர்வெல்அமைத்து இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யவில்லை. வார்டுகளுக்கு 3 முதல் 4 நாட்கள் வரை குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து ஊராட்சி செயலர் கோபால் கூறுகையில்:

ஜெயமங்கலம் ஊராட்சிக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பத்து நாட்களாக வினியோகிக்கவில்லை. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியம் உதவி பொறியாளர் அருண்குமாரிடம் கேட்டேன். கூட்டு குடிநீர் திட்டம் குழாய்கள் சேதமடைந்து சீரமைக்கும் பணி நடப்பதால் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகிக்கவில்லை. ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார் என்றார். --

Advertisement