தடுப்பணைகள் சேதம்: விவசாயிகள் வேதனை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மலைகள் அதிகளவில் உள்ளன. இந்த மலைகளில் இருந்து உருவாகும் ஓடைகள் மற்றும் ஏரிகளின் உபரிநீர் கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த தடுப்பணைகளால் மழைக்காலத்தில் உபரியாக வெளியேறும் நீர், கால்வாய்களில் குறிப்பிட்ட உயரம் வரை தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமைந்துள்ள வழிநெடுகிலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. உபரிநீர் வழிந்தோடும் கால்வாயும், நீர்நிலையாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது.

ஆனால், பள்ளிப்பட்டு அடுத்த கீழப்பூடி, ஆர்.கே.பேட்டை அடுத்த கிருஷ்ணாகுப்பம் ஏரி உபரிநீர் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் இடிந்து சேதமடைந்துள்ளன. குறிப்பாக, தண்ணீரை தடுக்கும் அமைப்பு மட்டுமே சேதமடைந்துள்ளன.

இந்த தடுப்புகளின் கான்கிரீட் கலவை விகிதம், எளிதாக உடையும் விதமாக தரமின்றி உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிமென்ட் கலவையில் ஜல்லிக் கற்கவே அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலத்தடி நீ்மட்டத்தை உயர்த்தும் விதமாக, தொலைநோக்கு பார்வையுடன் கால்வாய்களையும், நீர்நிலையாக மாற்றும் தடுப்பணைகளின் கட்டுமானத்தில் உரிய கவனம் செலுத்தி, சேதமடைந்துள்ள தடுப்பணைகளை மீண்டும் சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement