திடீர் மழையால் கிர்ணி பழம் விளைச்சல் பாதிப்பு மணலி விவசாயிகள் வேதனை

மணலி,:'திடீர் மழையால் கிர்ணி பழம், முலாம் பழம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என, மணலி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மணலி மண்டலத்தில் 150 - 200 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. சென்னை மாநகராட்சியில், விவசாயம் நடக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. நெல், கீரை வகைகள், வாழை உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. தவிர, சீசன் பழங்களான, கிர்ணி பழம், முலாம் பழம், தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்களும் விவசாயம் செய்யப்படும்.

இம்முறை சீசன் பழங்கள் பயிரிடுவதில், விவசாயிகள் துவக்கம் முதலே, தயங்கி வந்தனர். காரணம், அடிக்கடி கிடைத்த மழையால், விவசாய நிலம் ஈரப்பதம் காரணமாக, சீசன் பயிர்கள் பயிரிட ஏதுவாக, உழவு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே, கிர்ணி பழம் மற்றும் முலாம் பழம் விவசாயத்தை கையிலெடுத்தனர்.

அதன்படி, பிப்ரவரி மாதம் துவங்க வேண்டிய சீசன் பழங்கள் விவசாயம், மார்ச் மாதத்திற்கு பின்பே துவங்கியது. இதன் காரணமாக, ஏப்ரல் கடைசியில் சந்தைக்கு வர வேண்டிய பழங்கள், மே மாதத்தில் தான் சந்தைக்கு வர துவங்கியது.

ஏக்கர் ஒன்றிற்கு, 35,000 - 40,000 ரூபாய் செலவு செய்தால், ஒரு லட்சம் ரூபாய் வரை வரவு இருக்கும். இதற்கிடையில், சில தினங்களில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் அழுகி விட்டன.

இதனால் போட்ட முதல் தொகையை கூட எடுக்க முடியவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தர்ப்பூசணி குறித்த தவறான தகவல், பழம் அழுகி வீணாவது உள்ளிட்ட காரணங்களால் செலவழித்த தொகை கூட, கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ, 10 ரூபாய் விலை போன கிர்ணி பழம், நடப்பாண்டில், 3 - 4 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் வரவில்லை. கடுமையான நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இதே நிலை நீடித்தால், விவசாயம் அழிந்தே போய் விடும்.



டி.கார்த்திகேயன், 55, ஆண்டார்குப்பம், மணலி.

Advertisement