தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : தொழிலாளர்களின் நலனுக்காக இருந்த 44 சட்டங்களை நான்கு தொகுப்பாக மாற்றி தொழிலாளர் விரோதப் போக்கை கையாளும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் லெனின் பேசுகையில், ''குறைந்தபட்ச ஊதிய சட்டம், தொழிற்சாலை சட்டம், தொழிற்சங்க சட்டம், மிகைநேர ஊதியம், போனஸ் சட்டம் உட்பட 44 சட்டங்களை தொழிலாளர்களாகிய நாங்கள் போராடி பெற்றிருந்தோம். ஏற்கனவே 15 சட்டங்களை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது. மீதியுள்ள 29 சட்டங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு தொகுப்பு சட்டங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

பழைய சட்டத்தின்படி, ஒரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர்களுக்கு கீழே ஊழியர்கள் வேலை பார்க்கும் நிலையில் திடீரென அந்நிறுவனம் மூடப்பட்டால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை.

தற்போதுள்ள சட்டத்தில் 300 தொழிலாளர்கள் வேலை பார்த்தால் கூட மத்திய அரசின் அனுமதியின்றி மூடிவிடலாம் என்கிறது. மத்திய, மாநில அரசுகள் விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் 400, 500 தொழிலாளர்கள் வரை வேலை பார்த்தாலும் சொல்லாமல் மூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழைய சட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வதற்கு 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்தால் போதும்; தற்போது 60 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும். 100 பேர் இருந்தால் தான் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.

அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. திட்டமிட்டபடி ஜூலை 9ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றார்.

Advertisement