கர்நாடகாவில் கன்னடம் பேச மறுத்து வாடிக்கையாளருடன் வாக்குவாதம் : எஸ்பிஐ அதிகாரி இடமாற்றம்

1

பெங்களூரு: கர்நாடகாவில், எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர் கன்னடத்தில் பேச சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பெங்களூருவின் சூர்யா நகர் கிளையில் நடந்துள்ளது. அந்த வீடியோவில், குறிப்பிட்ட பெண் அதிகாரியை அணுகிய வாடிக்கையாளர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார். அதற்கு அதிகாரி, ஹிந்தியில் பதிலளித்தார். இதனையடுத்து வாடிக்கையாளர், அவரிடம் கன்னடத்தில் பேசும்படி தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆனால், அந்த பெண் அதிகாரி கன்னடத்தில் பேச மறுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றும்போது, இது கர்நாடக மாநிலம் எனக்கூற, அந்த அதிகாரி இது இந்தியா எனக்கூறியுள்ளார்.

இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது. சமூக வலைதளவாசிகள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ்பிஐ வங்கியையும் 'டேக்' செய்ய துவங்கினர். ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை மதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தத் துவங்கினர்.

மேலும், வங்கி நிர்வாகத்தை கண்டித்து அந்த வங்கிக் கிளை முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். பிரச்னை பெரிதானதை தொடர்ந்து,எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில், இந்தப் பிரச்னைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்த வங்கி நிர்வாகத்திற்கு பாராட்டுகள். இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்தது. இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. அனைத்து வங்கி அதிகாரிகளும் வாடிக்கையாளர்களை கன்னியத்துடன் நடத்த வேண்டும். உள்ளூர் மொழிகளில் பேச தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement