திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை கட்டட சேதத்தாலும் அச்சம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் அலுவலர்கள், மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சேதமடைந்துள்ள அலுவலகத்தை சீரமைக்க வேண்டும்.

திருத்தங்கல் நகராட்சியாக இருந்த போது செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகம் சிவகாசி மாநகராட்சியோடு இணைந்த பின் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. தவிர இங்கு இ--சேவை மையம், வரி வசூல் உள்ளிட்ட அலுவலகப் பணிகளும் நடந்து வருகிறது.

இதனால் இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் ஒவ்வொரு தேவைக்கும் வருகிற மக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர்.

தவிர இங்கு பணி புரிகின்ற அலுவலர்களுக்கும் இதே நிலைதான். மேலும் அலுவலகம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாடும் போது கட்டடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டடத்தை சீரமைக்கவும், கழிப்பறையை மராமத்துப் பணிகள் மேற்கொள்வதற்காகவும் ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ரூ. பத்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே மராமத்து பணிகள் செய்யப்பட்டு, கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement