மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் மாவட்ட செயலாளர் குமரகுரு சூளுரை

கள்ளக்குறிச்சி : 'மக்கள் விரோத ஆட்சி தி.மு.க.,வை வரும் தேர்தலுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினார்.

சின்னசேலம் நகர அ.தி.மு.க., சார்பில் ஜெ., மற்றும் பழனிசாமி பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் நடந்த கட்சிக் கொடியேற்று மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை உருவாக்கி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா வழங்கியவர் பழனிசாமி.

அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டது. காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து திட்டங்களையும் தி.மு.க., அரசு முடக்கியது.

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தி.மு.க., ஆட்சியின் தவறுகள் குறித்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்கள் விரோத ஆட்சியான தி.மு.க.,விற்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பழனிசாமி மக்களின் முதல்வராக திகழ்கிறார். அ.தி.மு.க., தனித்து நின்றாலும் வெற்றி பெறும். மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், தீவிர தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு குமரகுரு பேசினார்.

Advertisement