புதிய கல்வியாண்டில் மாணவர்களை வரவேற்க காத்திருக்கும் அரசு பள்ளி

ஆர்.கே.பேட்டை,:கோடை விடுமுறையில் தற்போது பல்வேறு பள்ளிகளில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரும் 2ம் தேதி புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த விடுமுறையில், பள்ளி கட்டமைப்பு மற்றும் சுத்தம் செய்யும் மராமத்து பணிகளில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில், மராமத்து பணிகள் நிறைவடைந்து பள்ளி சுற்றுச்சுவரில் தேச தலைவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. இதனால், நுழைவாயில் பகுதி, மாணவர்களை உற்சாகமாக வரவேற்க தயார் நிலையில் உள்ளது.

அதே நேரத்தில், பள்ளியின் உள்பகுதியில் கட்டுமான பொருட்களான ஜல்லிகற்கள் உள்ளிட்டவை இதுவரை அகற்றப்படாமல் கிடக்கின்றன. ஏணி, பிளாஸ்டிக் குழாய்களும் வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.

பள்ளியை ஒட்டியுள்ள ரேஷன்கடையின் மேல்தளம் இடிந்து தொங்கிக்கொண்டுள்ளது. இதனால், இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் பள்ளியை ஒட்டி சீரழிந்துள்ள ரேஷன்கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement