'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்

5

டாக்கா : வங்கதேசத்தில் இருந்து வெளியேறும் முன் அந்நாட்டின் அப்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா, 'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்; இதே இடத்திலேயே புதையுங்கள்' என, குறிப்பிட்டது தெரியவந்துள்ளது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தின்போது மனிதகுலத்திற்கு எதிராக நடந்த குற்றச்செயல்களை, வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.


இந்த விசாரணையில் வங்கதேச அரசின் தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் எடுத்துரைத்த வாதம் பற்றி வங்கதேசத்தின் பிரபல நாளிதழான 'புரோத்தம் ஹக்'கில் குறிப்பிட்டுள்ளதாவது:


வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம், கடந்த 2024, ஆகஸ்ட் 5ம் தேதி உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை, ராணுவ உயரதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.


அதற்கு மறுப்பு தெரிவித்த ஹசீனா, மாணவர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டார். எனினும், வங்கதேசம் முழுதும் போராட்டம் தீவிரமடைந்தது.


எனவே, பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஹசீனா, 'என்னை இங்கேயே சுட்டுத் தள்ளுங்கள்; இங்கேயே புதைத்து விடுங்கள்' என்றார். எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்த ஹசீனாவிடம், அமெரிக்காவில் இருந்த அவரது மகன் சாஜிப்பை தொடர்புகொண்டு பேசசெய்தோம்.


இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவிற்கு தன் சகோதரியுடன் தஞ்சமடைந்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement