சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு

ஈரோடு :ஈரோட்டில், சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட ஐந்து பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு, சங்கு நகர் முதல் வீதியை சேர்ந்த சையது முஸ்தபா மகன் சைமு, 24; கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். பரிசோதனைக்காக சிறுமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியின் வயதை அறிந்த மருத்துவ நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி சைமு, அவரது தந்தை சையது முஸ்தபா, 50, தாய் பாத்திமா, 40 மற்றும் சிறுமியின் தாய், தந்தை என மொத்தம் ஐந்து பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement