'ஒன் டே ரெஸ்ட், நெக்ஸ்ட் டே' கட்சி பணி; வாரிசுகளுக்கு தலைவர்கள் அறிவுறுத்தல்

சென்னை : 'தங்களுக்கு இணையாக, கட்சி பணியில் ஈடுபடாமல், பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் தரும் வாரிசுகளிடம், 'ஒரு நாள் ஓய்வெடுத்து கொள்ளுங்கள், அடுத்த நாள் கட்டாயம் கட்சி பணியில் ஈடுபடுங்கள்; அப்போது தான் பதவி கிடைக்கும். அதில் நீடிக்க முடியும்' என, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியில் அதிகாரமிக்க பதவியில் உள்ள மாவட்டச்செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு அடுத்து, தங்கள் பதவிக்கு, வாரிசுகளை கொண்டு வர களமிறக்கி உள்ளனர். அவர்கள், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி உள்ளிட்ட அணிகளில், மாவட்ட, மாநில அளவில் இணை, துணை செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளனர்.
வாரிசுகளில் சிலர் மட்டுமே, தினமும் கட்சியினரை சந்தித்து கூட்டம் போடுவது, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நலத்திட்ட உதவி வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றவர்கள், தாங்கள் நடத்தும் தொழில்கள், பொழுதுபோக்கு அம்சங்களில், கவனம் செலுத்துகின்றனர். கட்சி பணியில் ஈடுபடுவதில்லை.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, முக்கிய பதவிகளை வகித்து வருபவர்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்கக்கூடாது என்பதில், கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது. இந்த விபரத்தை தெரிந்து கொண்ட சீனியர்கள், வாரிசுகளுக்கு எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.
ஆனால், தங்களுக்கு இணையாக அல்ல, அதில், 10 சதவீதம் கூட வாரிசுகள் கட்சி பணியில் ஈடுபடுவதில்லை என்பதையும் சீனியர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, 'எங்கள் காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் கட்சி பணிகளை, நாளிதழ்கள் வாயிலாக தலைமை தெரிந்து கொண்டது. இன்று, சமூக வலைதளங்கள், தனியார் ஏஜென்சிகள் வாயிலாக, கட்சியினரின் செயல்பாடு உடனுக்குடன் மேலிடத்திற்கு செல்கிறது.
கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபடவில்லை எனில், எந்த பதவிகளும் உங்களுக்கு கிடைக்காது. எங்களால் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ள பதவியிலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே, ஒரு நாள் சொந்த பணி, பொழுதுபோக்கு, ஓய்வுக்கு என, எடுத்து கொள்ளுங்கள், அதற்கு அடுத்த நாள் கட்டாயம் கட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்; மாறி மாறி இப்படி செய்தால் தான் பதவி கிடைக்கும், தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க முடியும்' என, மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்ப வாரிசுகளும் செயல்பட துவங்கியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும்
-
தலைவர்களை ஒருமையில் பேசி சிக்கிய ஆதவ் அர்ஜூனா: இணையத்தில் வீடியோ வைரல்!
-
புதிய கட்சிகளை விமர்சிக்க கூடாது: சொல்கிறார் கமல்!
-
நான் உயிரோடு இருக்கக் கூடாது; மனமுடைந்து ராமதாஸிடம் குமுறிய ஜி.கே.மணி
-
நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று சொன்னவர் நடிகர் ராஜேஷ்: ரஜினிகாந்த் புகழாரம்
-
2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடிப்பது இதற்குத்தான்!