வனத்தில் இறந்து கிடந்த பெண் யானை

அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகத்திலுள்ள பனை காப்புக்காடு உச்சிகான் குட்டை வனப்பகுதியில், 7 முதல், 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை, மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, உடல் அழுகிய நிலையில் யானை இறந்து கிடப்பதை பார்த்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் முன்னிலையில், தர்மபுரி வன மண்டல கால்நடை உதவி மருத்துவர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், யானையை பிரேத பரிசோதனை செய்தனர். இதில், யானைக்கு உணவு ஜீரணிக்காமல் வயிற்று வலி ஏற்பட்டு, கடந்த ஒரு வாரத்திற்கு முன், உயிரிழந்தது தெரிந்தது. யானையின் உடல் வனப்பகுதியில் பிற வன உயிரினங்களின் உணவிற்காக, புதைக்காமல் அப்படியே விடப்பட்டது.

Advertisement