ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்

30

வொர்லி: இந்திய பெண் தொழிலதிபர் ஒருவர் ரு.639 கோடியில் சொகுசு பங்களாக்களை வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.



நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளம். இவை அனைத்தும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானதாக இருக்கும். அப்படி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் ரூ.639 கோடியில் 40 அடுக்குமாடிகள் கொண்ட 2 சொகுசு பங்களாக்களை தமக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கிறார்.


அவரது பெயர் லீனா காந்தி திவாரி. யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர். வொர்லியில் நமன் சனா பகுதியில் அரபிக்கடலை பார்த்தபடி அவர் வாங்கிய உள்ள பங்களாக்களின் பரப்பளவு மட்டும் 22,572 சதுர அடி.


ஒரு சதுர அடியின் விலை மட்டுமே ரு.2.83 லட்சம். பத்திரப்பதிவு ஆவணங்களின் படி இவர் செலுத்திய ஜி.எஸ்.டி., தொகை மட்டுமே ரூ. 63.9 கோடியாகும். ஒட்டு மொத்தமாக பார்த்தோமானால் கிட்டத்தட்ட லீனா காந்தி வாங்கிய 2 சொகுசு குடியிருப்புகளின் விலை ரூ.703 கோடி. இது இந்தியாவிலேயே மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சொத்து என்று கூறப்படுகிறது.


வொர்லியில் ஆடம்பர சொத்துகள் வாங்குவது என்பது புதிய விஷயமல்ல. அண்மையில் இதே வொர்யில் கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மற்றும் அவரது குடும்பத்தினர் 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட ஒரு முழு சொகுசு குடியிருப்பு கட்டடத்தை வாங்கினர். அதன் விலை ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement