லட்சம் பெண்களை தொழில் அதிபராக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்

5

சென்னை: தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தலா, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்த உள்ளது. இதற்கான கருத்துரு இறுதி செய்யப்பட்ட நிலையில், சில தினங்களில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட உள்ளது.

தமிழகத்தில் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் மானியங்கள் வாயிலாக தொழில் முனைவோரை உருவாக்கும் பணியை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையரகம் மேற்கொள்கிறது.

பெண்கள் சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியானது.

இத்திட்டத்தை, தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தில், மகளிருக்கு மிக குறைந்த வட்டியில், 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்படும்.

இதற்கு அரசு, 20 சதவீதம் மானியம் வழங்கும். இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில், 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிக்கு கடன் தவிர, திறன் மேம்பாட்டு பயிற்சி, தயாரிப்புகளை விற்க ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

பெண்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக பொருளாதார வளர்ச்சியில், பெண்களின் பங்கை அதிகரிக்க, ஆண்டுக்கு 20,000 பேர் என, ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை, தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், விரைவாக விண்ணப்பம் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement