பிரதமரை பாராட்டியதால் கடும் அதிருப்தி: காங். எம்.பி. சசிதரூருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம்

8

புதுடில்லி: பிரதமரை பாராட்டிய சொந்த கட்சி எம்.பி., சசிதரூர் மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில் அவருக்கு பா.ஜ., ஆதரவளித்துள்ளது.



ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் இடம்பெற்றுள்ளார். இத்தனைக்கும் அவரது பெயரை மத்திய அரசிடம் காங்கிரஸ் பரிந்துரை செய்யவில்லை.


பனாமா சென்றுள்ள அவர், மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினார். அண்மைக் காலமாக சசி தரூரின் பா.ஜ.,ஆதரவு பேச்சு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியிலும், தலைமையிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


சசிதரூரின் பேச்சுகள், அவரது தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கூறி உள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் போல் கருத்து தெரிவிக்கிறார் என்று மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்து இருந்தார்.


தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சசிதரூருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்படும் சூழலில் அவருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது.


இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;


காங்கிரசுக்கு என்ன வேண்டும்? நாட்டின் மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது? வெளிநாடு சென்றிருக்கும் இந்திய எம்.பி.,க்கள் பிரதமருக்கும், நாட்டுக்கும் எதிராக பேச வேண்டுமா? அரசியலில் விரக்திக்கும் ஒரு எல்லை உண்டு.

இவ்வாறு கிரண் ரிஜூஜூ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement