கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்

12

சென்னை: ''தமிழக மீனவர்களின் இன்னல்கள் தீர, கச்சத்தீவு மீட்பு ஒன்றே தீர்வாகும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, திருவொற்றியூரில், 272 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது உள்பட, 426 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 மீன்வளத் துறை திட்டப் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில், மீன்பிடி இறங்குதளம் உள்பட, 170 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மேலும், 2,290 மீனவர்களுக்கு, 10.6 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களையும் வழங்கினார்.

பின், முதல்வர் பேசியதாவது:

சூரை மீன்பிடி துறைமுகம் வாயிலாக, 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு, 400 கில்லட் படகுகள், 250 நாட்டு படகுகள் நிறுத்தவும், 60,000 டன் மீன்கள் கையாளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மீனவர்களின் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் பயனாக இருக்கும்.

சென்னையின் வளர்ச்சியில், பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ கிராமங்களின் பங்கு மிக முக்கியம். மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாப்பது, தமிழ் சமுதாயம் - பண்பாட்டை காப்பதற்கு சமம்.

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக மீனவர்களின் இன்னல்கள் தீர, கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வு. நான்கு ஆண்டுகளில், 97 சம்பவங்களில், 185 படகுகள், 1,383 மீனவர்கள், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுவிக்க கோரி, மத்திய அரசுக்கு, 76 முறை கடிதம் எழுதியுள்ளேன்; நேரிலும் வலியுறுத்தியுள்ளேன்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் குரல் கொடுக்கின்றனர். அதன் விளைவாக, 1,354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்; எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடரும்.

இவ்வாறு, முதல்வர் பேசினார்.

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மீன்வளத் துறை செயலர் சுப்பையன், வடசென்னை எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement