பனிப்பாறை சரிந்து புதைந்த மலை கிராமம்: சுவிஸ் நாட்டில் இதுதான் முதல் முறை

2

பெர்ன்: புவி வெப்பமடைதல் காரணமாக, பனி்ப்பாறை சரிந்து, சுவிஸ் நாட்டின் மலை கிராமமான பிளாட்டன் புதைந்தது. ஒருவர் மாயமானார்.

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்து, மலைத்தொடராலும் பனி மலைகளாலும் சூழப்பட்டுள்ள நாடாகும்.
ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான பனிப்பாறைகளுக்கு தாயகமாக இந்த நாடு உள்ளது.

பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மட்டுமல்ல, சுவிட்சர்லாந்தில் சுற்றுலாவிற்கும் மையமாகவும் உள்ளன.

இங்குள்ள மலை கிராமமான பிளாட்டன், பிர்ச் பனிப்பாறை அடிவாரத்தில், பெர்னீஸ் ஆல்ப்ஸால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. பிர்ச் பனிப்பாறை சிதைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக, கிராமத்தில் வசித்த 300க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலோர் முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் பனிப்பாறை சரிந்ததால் பிளாட்டன் கிராமம் பெரும்பகுதி புதைந்தது.
125 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிலை முதன்முறையாக, இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிபர் கரின் கெல்லர்-சுட்டர் பகிர்ந்த ட்ரோன் படம், முழு கிராமம், அந்த வழியாக ஓடும் லோன்சா நதி, அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு சேற்றில் புதைந்துள்ளதை காட்டியது.

கரின் கெல்லர்-சுட்டர் கூறுகையில், 'மக்களே, உங்கள் வீட்டை இழப்பது மிகவும் மோசமானது. இந்த நேரத்தில் பிளாட்டனில் வசிப்பவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்' என்று கூறினார்.

சுவிஸ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளதாவது:

2000ம் ஆண்டு முதல் சுவிஸ் பனிப்பாறைகளில் அவற்றின் அசல் அளவில் 40 சதவீதத்தை இழந்துள்ளன.

2006 முதல் ஐரோப்பிய நாட்டில் பனிப்பாறைகள் விரைவாக உருகுவது குறித்து மீண்டும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

கோடையில் மிக அதிக வெப்பநிலை மற்றும் குளிர்காலத்தில் குறைந்த பனி குவிப்பு காரணமாக 2022 மற்றும் 2023 க்கு இடையில் நாட்டின் பனிப்பாறை அளவில் 10 சதவீதம் உருகியது.

இவ்வாறு அறிவியல் அகாடமி குறிப்பிட்டுள்ளது.

Advertisement