பாக்., விமானப்படை தளங்களை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை: ஒப்புக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்

7

இஸ்லாமாபாத்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது தங்கள் நாட்டு விமானப்படை தளங்கள் மீது பிரமோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டு உள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவை நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. அது அனைத்தையும் இந்தியா முறியடித்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நமது நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன பாகிஸ்தான், போரை நிறுத்தும்படி இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ.,விடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

ஆனால், இந்த மோதலில் வெற்றி பெற்றுவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள், ராணுவத்தினர் பொய் பிரசாரங்களை அவிழ்த்துவிட்டனர். பொய்யை உண்மையாக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. இந்தியாவின் விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கதை கட்டியது. ஆனால், இதனை இந்தியா ஆதாரங்களை மேற்க்கோள் காட்டி முறியடித்தது.


இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: மே 9 -10ம் தேதி இரவுகளில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். காலை 4:30 மணிக்கு பிறகு தொழுகைக்கு பிறகு தாக்குதல் நடத்துவது என படைகள் தயாராகி வந்தன. ஆனால், அதற்கு முன்னர், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement