அ.தி.மு.க., வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் அசோக்குமார்; தி.மு.க., சார்பில் செங்குட்டுவன் போட்டியிட்டனர். 794 ஓட்டுகள் வித்யாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், 'வேட்பு மனுவில் சொத்துக்கள் குறித்த விபரங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் கமிஷன் நிர்ணயித்த வரம்பை மீறி, செலவிடப்பட்டு உள்ளது' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், இடைக்காலமாக தாக்கல் செய்த மனுவில், 'ஓட்டு எண்ணிக்கையின் போது, 605 தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அவற்றை சரிபார்த்து மீண்டும் எண்ண, உயர் நீதிமன்ற பதிவாளரை நியமிக்க வேண்டும்' என, செங்குட்டுவன் தரப்பில் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேர்தல் ஆணையத்தின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் செங்குட்டுவன், அசோக்குமார் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், 605 தபால் ஓட்டுகளையும் எண்ண வேண்டும். ஒரு மாதத்துக்குள் இந்த நடவடிக்கையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் 25ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

பின், பிரதான தேர்தல் மனு மீதான விசாரணை, நீதிபதி பி.டி.ஆஷா முன் நடந்தது. அப்போது, அசோக்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த் ஸ்ரீவத்சவா, எஸ்.தமிழ்செல்வன் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரதான தேர்தல் வழக்கின் மீதான உத்தரவை, கடந்தாண்டு செப்டம்பரில், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இதையடுத்து, நீதிபதி பி.டி.ஆஷா நேற்று அளித்த தீர்ப்பில், செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement