பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

போடி: போடியில் போலீசார் பறிமுதல் செய்து ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்திய வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி கொட்டக்குடி ஆறு, அணைப் பிள்ளையார் அணைப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் இரவு, பகலாக மணல் கடத்தல் நடந்தது. மணல் கொள்ளையால் அணைப்பகுதி இடிந்து விடும் நிலை ஏற்பட்டது. இதனால் அணைப்பிள்ளையார் அணைப் பகுதியில் மணல் அள்ள மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின் பிளாஸ்டிக் சாக்குளில் மணல் அள்ளி நம்பர் இல்லாத டூவீலர்கள் மூலம் கடத்தி வந்தனர். ஆறு, ஓடை மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 500க்கும் மேற்பட்ட டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிமீறலில் பறிமுதல் செய்யப்பட்ட கார், டூவீலர்கள் போடி தாலுகா, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவை போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தி உள்ளனர். 10 ஆண்டுகள் ஆகியும் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்காமல் உள்ளன. அதனை முறைப்படி ஏலமும் விடவில்லை. இதனால் மழை, வெயிலில் துருப்பிடித்து வீணாகின்றன. மேலும் விஷப் பூச்சிகளின் கூடாரங்களாக மாறி உள்ளன. எனவே பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement