விதை நெல் விற்பனையில் வேகம் காட்டும் வேளாண்துறை கிலோவிற்கு ரூ.20 மானியம்

கம்பம்:விதை நெல் விற்பனையில் கம்பம் வேளாண் துறை வேகம் காட்ட துவங்கி உள்ளது . ஆர்.என்.ஆர் . ரக நெல் விதை கிலோவிற்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் 10 நாட்களுக்கு முன்பே துவக்கி விட்டனர். ஜுன் முதல் தேதி நாற்றுகள் வளர்க்க தண்ணீர் திறப்பதில் எப்போதுமே இழுபறி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மே மாதம் நான்காவது வாரமே துவங்கியதால் நீர்வளத்துறையும் ஜுன் முதல் தேதி தண்ணீர் திறக்க தயாராகி வருகிறது.

கடந்தாண்டும் முதல் போகத்தில் ஆர்.என்.ஆர் ரகம் நல்ல மகசூல் கிடைத்தால் இந்தாண்டும் இதே ரகத்தை ஒட்டுமொத்த விவசாயிகளும் - தேர்வு செய்துள்ளனர். கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆர்.என். ஆர். ரகம் விற்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் விதை கிராம திட்டங்களின் கீழ் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் விற்கப்படுகிறது . ஒரு கிலோ ரூ.43 என்றும், மானியம் ரூ.20 போக ரூ.23 விலையில் பெற்றுக் கொள்ள வேளாண் துதற அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ' கம்பம் வட்டாரத்திற்கு 21 டன் அனுமதிக்கப்பட்டது. இதுவரை 10 டன் விற்பனையாகி உள்ளது. ஒரு விவசாயிக்கு 50 கிலோ விதை வழங்கப்படும்', என்றார். நெல்விதை பெற கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement