போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல: இந்தியா உறுதி

புதுடில்லி: பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் மீதான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, ஹாட்லைன் மூலம் இந்திய டிஜிஎம்ஓ.,விடம் கெஞ்சியதை தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் அமலானது. ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்த அறிவிப்பு காரணமாக இந்த போர் நிறுத்தம் அமலானது என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதனை இந்தியா மறுத்து வருகிறது.
இந்நிலையில், மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமெரிக்க அரசு, ' வரி விதிப்பு குறித்த டிரம்ப்பின் அறிவிப்புகள் காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது' என நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: 'ஆபரேஷன் சிந்தூர்' துவங்கிய மே 7 ம் தேதியில் இருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்த 10 ம் தேதி வரை இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரிவிதிப்பு குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






