585 விதை விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மதுரை: விதை ஆய்வுத்துறையின் கீழ் மதுரை, தேனி மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் 465 விதை விற்பனை நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீத மகசூலை அதிகரிக்கலாம்.

விதை உற்பத்தியாளர், விநியோகஸ்தர், விற்பனையாளர்களின் நிறுவனங்களில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகளை சேகரித்து விதைப் பரிசோதனை நிலையங்களில் தரம், முளைப்புத்திறன் பரிசோதனை செய்த பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை, தேனி மாவட்டங்களில் நான்காண்டுகளில் 19 ஆயிரத்து 666 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

16 ஆயிரத்து 139 அலுவலக விதை மாதிரிகளும், 4208 பணி விதை மாதிரிகளும் எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

விதைச் சட்ட விதிகளை மீறிய விதை விற்பனை நிலையங்களில் ரூ.5 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 721 டன் அளவு நெல், காய்கறி, மக்காச்சோளம், பருத்தி, இதர பயிர்களின் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளோம். தரக்குறைவான விதைக் குவியலுக்கு எதிராக 465 விதை விற்பனை நிறுவனங்கள் மீது துறை ரீதியாகவும், 120 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனங்களின் விற்பனைப் பட்டியலில் விவசாயின் பெயர், முகவரி, பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு விவசாயிடம் கையெழுத்து வாங்க வேண்டும். விதைகள் இருப்பு, விலை விபரத்தை பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

லைசென்ஸ் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகள் வாங்க வேண்டும் என்றார்.

Advertisement