குளத்தில் தள்ளி தொழிலாளி கொலை உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கூலித்தொழிலாளியை அடித்து குளத்தில் தள்ளி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 20; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் கிளியூர் அருகே தீர்த்த குளத்தில் அமர்ந்து நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அய்யனார், 24; மற்றும் பிரகாஷ், 29; ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில், அய்யனார், பிரகாஷ் இருவரும் சுபாஷை அடித்து குளத்தில் தள்ளி கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து, அய்யனார், பிரகாஷ் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரகாஷ் பெங்களூர் சட்டக் கல்லுாரியில் எல்.எல்.பி., படித்து வருகிறார். இவரது தங்கையை சுபாஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பிரகாஷ் கண்டித்தும் கேட்காததால், நண்பர் அய்யனாருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சுபாஷை மது அருந்தலாம் எனக்கூறி கிளியூர் கிராமத்திற்கு வரவழைத்தார். அங்கு அவரை மது குடிக்க வைத்து, இருவரும் இணைந்து கடுமையாக தாக்கினர். பின்னர் தீர்த்தக்குளத்தில் அவரை தள்ளிவிட்டு தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர் என, தெரிவித்தனர்.

Advertisement