பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்

4

சண்டிகர்: பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும் 34 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து தரமட்டமாகியது.


இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் இருந்து குடியேறியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement