நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ் சமூக ஊடகப் பேரவை கூட்டத்தில் பரபரப்பு

திண்டிவனம்: தைலாபுரத்தில் நடந்த சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில், உட்கட்சி விவகாரங்கள் பற்றி யாரும் பேசக்கூடாது என, நிர்வாகிகளிடம், கட்சி நிறுவனர் ராமதாஸ் சத்தியம் வாங்கினார்.

பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மகளிர் அணி, இளைஞர் அணி, சமூக நீதி பேரவை, சமூக முன்னேற்ற சங்கம், பட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அடுத்தடுத்து நடந்தது.

இந்த கூட்டங்களில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

இந்நிலையில், நேற்று காலை சமூக ஊடக பேரவை கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்ட கவுரவ தலைவர் ஜி.கே.மணி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சமூக ஊடகப் பேரவை மாநில தலைவர் தமிழ்வாணன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் மற்றும் சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சமூக வலைதளங்களில் உட்கட்சி விவகாரங்கள் பற்றி எதுவும் பேசக்கூடாது, தவறான கருத்துக்களை பகிரக்கூடாது என, நிர்வாகிகளிடம் ராமதாஸ் சத்தியம் வாங்கினார்.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அன்புமணியை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும். திண்ணை பிரசாரங்கள், பா.ம.க.,வின் வளர்ச்சித் திட்டங்கள், 108 ஆம்புலன்ஸ் திட்டம், பா.ம.க., மக்களுக்காக நடத்திய போராட்டங்கள், இடஒதுக்கீடு குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ராமதாஸ் விரிவாக கூறினார்.

இந்த கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

Advertisement