வங்கதேசத்தில் டிசம்பர் முதல் ஜூன் வரை எந்நேரத்திலும் தேர்தல் நடக்கலாம்: முகமது யூனுஸ் அறிவிப்பு

2

டாக்கா: "வங்கதேசத்தில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை இடைப்பட்ட காலத்தில், எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம்" என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.


வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் முழு ஆதரவு அளித்தார்.


தற்போது, விரைவில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பொது தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தும்படி, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுசிடம் வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் புதிய தேர்தல்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார். அவர், டோக்கியோவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


இது தொடர்பாக, முகமது யூனுஸ் பேசியதாவது: வங்கதேச அரசு தேர்தல் மற்றும் நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். இந்த சீர்திருத்தங்களின் வேகத்தைப் பொறுத்து,வங்கதேசத்தில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம்.


தேர்தல்கள் நடக்கும்போது, ​​ தேர்தல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைப்போம். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொறுமையற்றவர்களாக இருப்பதால், தேர்தல்கள் எப்போது என்று அவர்களிடம் சொல்ல மக்கள் வலியுறுத்துகிறார்கள். மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement