இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிந்ததில் 13 பேர் பலி: 12 பேர் படுகாயம்

2

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.


இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (மே 30) காலை பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான இயந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.


இந்த விபத்தில் தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


மேலும் 12 பேர் பலத்த படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி தெரிவித்துள்ளார்.


அந்தச் சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் மண்ணுக்குள் புதைந்தது. இதில், 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement