கொரோனாவால் தினம் 15 பேர் பாதிப்பு வீரியம் இல்லை என்கிறது தமிழக அரசு

1

சென்னை: தமிழகத்தில் தினமும் 15 பேர் வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அவை வீரியம் இல்லாமல் இருப்பதாக, பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதுடன், நாள்பட்ட இணை நோயாளிகளுக்கு, பாதிப்பை தீவிரப்படுத்தி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கர்நாடகா, கேரளா, மஹராஷ்டிரா மாநிலங்களில், கொரோனா தொற்றால், ஆறு பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 65 வயது முதியவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், முதியவர் எவ்வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

முதியவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்தன. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பு, அவரது உயிரிழப்புக்கான காரணம் கிடையாது. தமிழகத்தில், தினமும் 10 முதல் 15 எண்ணிக்கையில், தொற்று பரவி வருகிறது.

இவற்றால், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா உருமாற்றமடைந்து இருக்கிறதா என, 19 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதில், ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவு வைரஸ் தான் உள்ளது. புதிய பாதிப்புகளும், வீரியமும் இல்லை. எனவே, கொரோனாவை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். இணை நோயாளிகள், முதியவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால், மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

கொரோனாவால் எச்சரிக்கை அவசியம். ஆனால், பதற்றம் வேண்டாம். கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை தற்போது இல்லை.

Advertisement