அனைத்து துறைகளிலும் பாக்.,கை முந்திய இந்தியா: முப்படை தலைமை தளபதி

9

சிங்கப்பூர்: '' பன்முகத்தன்மை இருந்த போதிலும் பொருளாதார செயல்பாடு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை காட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: இந்தியா பாகிஸ்தான் உறவை பொறுத்தவரை நாங்கள் எந்த மூலோபாய திட்டங்கள் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்ற போது, ஜிடிபி, பொருளாதாரம் ஆகியவற்றில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது.

ஆனால், இன்று பன்முகத்தன்மை இருந்த போதிலும் பொருளாதார செயல்பாடு, மனித வள மேம்பாடு, சமூக நல்லிணக்கம் என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த 2014 ல் பிரதமர் ஆக பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கைதட்ட இரண்டு கைகள் தேவை. ஆனால், பதிலுக்கு நமக்கு கிடைப்பது விரோதம் மட்டுமே என்றால், இப்போதைக்கு உறவை முறித்துக் கொள்வது ஒரு நல்ல உத்தியாக இருக்கும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பை பயன்படுத்தினோம். இதோடு, வெளிநாட்டினரின் உதவி இல்லாமல், நமது வான் பாதுகாப்புக்கான கட்டமைப்பை உருவாக்கினோம்.

மே 7, 8 மற்றும் 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தானின் உள்பகுதிக்குள் சென்று விமானப்படை தளங்களை தாக்கினோம். அங்கு துல்லியமாக தாக்குதல் நடத்தி அந்நாட்டின் வான் பாதுகாப்பு சக்தியை அழித்தோம். 10 ம் தேதி இந்திய விமானப்படை அனைத்து வகை போர் விமானங்களையும் பயன்படுத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில் பெரும்பாலானவை துல்லியமாக நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement