பிறப்பை விட இறப்பு விகிதம் அதிகம் ; நாட்டில் முதலிடத்தில் தமிழகம்

27


புதுடில்லி: நாட்டில் 49 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.


2021ம் ஆண்டின் இந்திய குடிமைப்பதிவு தரவுகளை ஆய்வு செய்யும் போது, மக்கள் தொகை வளர்ச்சி பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் மாநில மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.


இந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் பிறப்பு விகிதத்தை விட, இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகவில்லை. ஆனால், 2021 நிலவரப்படி, மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் (அப்போதைய மாவட்ட எண்ணிக்கை) 17 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த விகிதமானது, கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.


நாட்டில், 2019ம் ஆண்டு பிறப்பை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகம் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. 2019ல் 7 மாவட்டங்களாக இருந்த இந்த எண்ணிக்கை, 49 ஆக உயர்ந்துள்ளது.


உத்தரபிரதேசத்தில் 75 மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள 51 மாவட்டங்களிலும் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது.


கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களில் 7 மாவட்டங்களிலும், கேரளாவில் 14 மாவட்டங்களில் 6 மாவட்டங்களிலும் இறப்பு விகிதம் அதிகம் காணப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, குஜராத்தில் 5 மாவட்டங்களும், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களிலும், தெலங்கானா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, ஹிமாச்சல், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டங்களிலும் பிறப்பு விகிதத்தை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

Advertisement