கன்னட மொழி, இனம் எப்போது எந்த காலகட்டத்தில் தோன்றியது; சீமான் கேள்வி

14


மதுரை: கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? என்று நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விக்கு சீமான் பதிலளித்து பேசினார்.


கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னடர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு,

பதில்; கர்நாடகாவில் தானே தக் லைப் படம் வெளியாகாது. உலகம் முழுவதும் 13 கோடி பேர் தமிழர் பரவி இருக்காங்க. கன்னடம் மொழி பற்றி பேசியதால் கமல்ஹாசனின் படத்தை தடுக்கறீங்க. தம்பி, விஜய் என்ன பண்ணாரு. அவர் படத்திற்கு எதுக்கு தடை விதித்தீர்கள். உங்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு.


அதே கர்நாடகாவில் இருந்து வந்த ஈ.வெ.ரா.,வுக்கு தமிழ் என்றாலே வெறுப்பா இருக்கு. சனியன் தமிழை ஒழிங்க என்றார். ஆனால், கன்னடரான அவரை நாங்க தமிழர் தலைவரா ஏற்க வேண்டும். எப்படி இருக்கு பாருங்க. தமிழ் என்றாலே அவ்வளவு கசப்பு, அருவருப்பா இருக்கு அவங்களுக்கு. தமிழில் இருந்து பிறந்த மொழி என்பதை ஏன்ற வரலாற்றை ஏற்கவே கன்னடர்களுக்கு வெறுப்பா இருக்கு.


நாங்க தமிழர்கள். எங்களின் தோற்றுவாய் எது, எங்களுடைய தொடக்கம் எது, மொழியின் தொடக்கம் எது என்று வரலாற்று பூர்வமாக சொல்றோம். அதைப் போலவே, கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? அவங்களுக்கு ஒரு பிரச்னை பண்ண வேண்டும். அதற்காக, இப்படி பண்ணுகிறார்கள், எனக் கூறினார்.


ஈ.வெ.ரா.வுக்கு ஜாதி சாயம் பூசுவதாக த.வெ.க., தலைவர் விஜய் கூறியது பற்றிய கேள்விக்கு;


பதில்; அது எல்லாம் ஒன்றுமில்லை. ஈ.வெ.ரா.வே ரொம்ப நாட்களாக நாயக்கர் என்று தான் கையெழுத்து போட்டார். இங்கு வெளியான ஈ.வெ.ரா., படம், ஆந்திராவில் நாயக்கர் என்ற பெயரில் தான் வெளியானது. அவர் எழுதிய கடிதத்தில் எல்லாம் நாயக்கர் என்று தான் போட்டுள்ளது. தம்பி விஜய் ஏதோ சொல்லுகிறார், என்றார்.


தி.மு.க., கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி., பதவி கொடுக்காதது குறித்த கேள்விக்கு,


பதில்; தி.மு.க., தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கமல்ஹாசன் எம்.பி., வேண்டும் என்று பேசி முடிவெடுத்தார்கள். அதேபோல, வைகோவும் பேசி இருக்க வேண்டும். தி.மு.க.,வில் என்னை தேர்வு செய்யுங்கள் என்று வைகோ கேட்க முடியாது. ஏனெனில் இவர் இன்னொரு கட்சியின் தலைவர், எனக் கூறினார்.


பா.ம.க., உட்கட்சி மோதல் குறித்த கேள்விக்கு,


பதில்; பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள மோதலை பார்க்கையில் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஐயா, இவ்வளவு தூரம் காயம் பட்டிருக்கிறார் என்பதை பார்ப்பது வேதனையளிக்கிறது. இந்த காயங்கள் ஆறிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். சின்ன சின்ன மன வருத்தங்கள் வந்து உள்ளது. இருவருமே அருகருகே அமர்ந்து பேச சூழல் இல்லாததால், அதனை பொதுவெளியில் பேச வேண்டியதாயிற்று. கட்சிக்குள் இருக்கும் சின்ன முரண், சரியாயிடும், என்றார்.


நாளை முதல்வர் வருகையால் சாலைகள் எல்லாம் சீரமைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு,


பதில், அடிக்கடி முதல்வர் ஒவ்வொரு ஊருக்கும் வர வேண்டும் என்று வாழ்த்துங்கள். அப்போது தான், எல்லா ஊருக்கும் சாலைகள் பளீச் பளீச் என்று வரும் எனக் கூறினார்.

Advertisement