கனமழையால் நிலச்சரிவு: அசாமில் 5 பேர், அருணாச்சலில் 7 பேர் உயிரிழப்பு

குவஹாத்தி: கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அசாம் மாநிலத்தில் 5 பேரும், அருணாச்சலில் 7 பேரும் உயிரிழந்தனர்.


அசாமின் சிராங், பக்சா, பர்பெட்டா, போங்கைகான், பஜாலி, தமுல்பூர், தர்ராங் மற்றும் உடல்குரி ஆகிய இடங்களில் இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதி கன மழையால் 6 மாவட்டங்கள் வெள்ளம் போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளன.

கடந்த 24 மணி நேரமாக அசாமில் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் மற்றும் குழப்பம் ஆகியவை தொடர் மழையால் ஏற்பட்ட பேரழிவால் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.



தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ருக்மினிகான் பகுதி மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. வெள்ளம் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளதால், அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது, இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். குவஹாத்தியின் சாத்கான் பகுதியில், ஒரு யானையும் தண்ணீரில் சிக்கித் தவித்தது.

இந்நிலையில் நகர்ப்புற விவகார அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா கூறுகையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசுக்கு ஆதரவாக தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்கின்றன, என்றார்.

அருணாச்சலில் 7 பேர் பலி:



அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள பனா-செப்பா சாலையில் இருந்து நிலச்சரிவில் சிக்கிய வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியாற்றி உயிரிழந்த அனைவரது உடல்களையும் மீட்டனர்.

மாநில உள்துறை அமைச்சர் மாமா நதுங், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மழை பெய்யும் போது மக்கள் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Advertisement