காட்டுப்பன்றிகளை சுட வனத்துறையினருக்கு பயிற்சி விவசாய குறைதீர் கூட்டத்தில் தகவல்

திண்டுக்கல்:காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு வனத்துறையினருக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறைவடைந்தவுடன் வனத்துறை, வி.ஏ.ஓ.,க்கள் உட்பட அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்:
விவசாயிகள்(ஒட்டுமொத்தமாக) : ஆவின் நிறுவனத்திற்க்கு பால் வழங்குபவர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. கறவை மாடு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு காப்பீடு செய்வதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.75 மட்டுமே ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய ரூ.2 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். அனைத்து கறவை மாடுகளுக்கும் ஆவின் மூலம் காப்பீடு வழங்க வேண்டும் .
கலெக்டர் : ஆவின் வளர்ச்சியை முன்னிட்டு அந்நிறுவனத்துக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் ஆவினுக்கு பால் வழங்க முன் வர வேண்டும்.
ராஜேந்திரன் ( விளாம்பட்டி) : பல ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் கடைமடை பகுதி வரை கால்வாயை தூர்வாருவதற்கு பொதுப் பணித்துறையினர் முன்வரவேண்டும்.
கலெக்டர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகராஜ்: மலைப்பகுதிகள் மட்டுமின்றி, கருவேல மரங்கள் நிறைந்த சமவெளி பகுதியிலும் காட்டுப்பன்றிகள் அதிகமாக உள்ளது. மக்காசோள பயிர்களை நாசப்படுத்துகின்றன.
ராஜ்குமார் (மாவட்ட வன அலுவலர் ) : காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு வனத்துறையினருக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிறைவடைந்தவுடன் வனத்துறை, வி.ஏ.ஓ.,க்கள் உட்பட அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமசாமி,( அய்யம்பாளையம் ): வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கல் தடுப்பணை 1977ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் சேதமடைந்தது. அதன்பின் சீரமைக்கவில்லை. புதிய தடுப்பணை கட்ட ரூ.6 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டு அதுவும் கிடப்பில் உள்ளது. புதிய தடுப்பணைக்கு பதிலாக அதே தடுப்பணையை சீரமைத்து விடலாம். 54 கிலோ மீட்டர் நீளமுள்ள அழகாபுரி வலது பிரதான கால்வாயில் 100 கன அடி தண்ணீர் செல்லும் அமைப்பினை தற்போது 200 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் மாற்ற ரூ.65 கோடியில் பணிகள் நடக்கிறது. 35 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே நிரம்பிய தடுப்பணையில் இருந்து கூடுதல் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ரூ.65 கோடி செலவிடுவது ஏன் .
கலெக்டர் : அய்யம்பாளையம் வரட்டாற்றின் குறுக்கே சேதமடைந்த கல் தடுப்பணையை சீரமைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். அழகாபுரி வலது பிரதான கால்வாயிலிருந்து குளங்களுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.
விவசாயிகள் : பட்டா நிலங்களில் மின்வேலி அமைக்க விண்ணப்பித்தவர்களின் மனு நிராகரிகப்பட்டுள்ளது.
மாவட்ட வன அலுவலர் : மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, வத்தலகுண்டு வனச் சரகங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் வகையில் பட்டா நிலங்களில் மின்சார வேலி அமைக்க 235 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 35 பேருக்கு மின்வேலி அமைக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்களில் குறிப்பிட்ட இடங்கள் தாழ்வாக மின்சாரம் செல்லும் இடங்களாகும். அதனால் அந்த மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மின் வேலிகளில் பொருத்தப்படும் ஒலிப்பான்கள், முறையாக வேலை செய்வதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு தொழில்நுட்ப யுத்திகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
..........
கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டரும், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். அப்போது சக விவசாயிகள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டுமே பேசுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும் கூட அந்த விவசாயி தொடர்ந்து அமலாக்கத் துறை கண்டிக்கும் வகையில் பேசினார். பின்னர் அவரை சக விவசாயிகள் கண்டித்து இருக்கையில் அமர வைத்தனர்