எடை குறைப்பு சிகிச்சையால் பாதிப்பு பெண்ணிற்கு இழப்பீடு தர உத்தரவு
சென்னை,:உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நகர், கிழக்கு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:
அமைந்தகரையில் உள்ள, வி.எல்.சி.சி., பிரைவேட் லிமிடெட்' என்கிற நிறுவனத்தில், கடந்த 2023 நவ.,3ல் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு அணுகினேன். அங்கு, 'எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷன்' என்கிற சிகிச்சையை, எனக்கு பரிந்துரைத்தனர். சிகிச்சை கட்டணமாக, 5,899 ரூபாய் வசூலித்தனர்.
முதல் நாள் சிகிச்சையின்போது, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற உணர்வு இருந்தது. இது, பொதுவானது; அடுத்தடுத்த சிகிச்சையில் சரியாகி விடும் என, எனக்கு சிகிச்சை அளித்தவர்கள் சமாதானப்படுத்தினர்.
இதை நம்பி மீண்டும் சிகிச்சைக்கு சென்றேன்.
அப்போது, இடது கையில் தாங்க முடியாத வலியும், இருமுறை வலிப்பும் ஏற்பட்டது போல துாக்கி துாக்கி வீசப்பட்டது. இதையடுத்து, உடல்நிலை மோசமானது.
பின், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானது. உடல் நல பாதிப்புக்கு, ஆறு மாதம் வரை சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை உருவானது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக அளித்த புகார் மீது, இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'உண்மையை மறைத்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், விசாரணைக்கு உகந்தது அல்ல' என, சிகிச்சை அளித்த நிறுவனம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் சிகிச்சை பெற்ற நிறுவனம் மருத்துவமனை என வகைப்படுத்தப்படவில்லை. எடை குறைப்புக்கான சிகிச்சை மையமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், சிகிச்சை மையம் என்றாலும் கூட, அதற்கான பதிவு சான்றிதழ் எதுவும் இல்லாமல், அந்த நிறுவனம் செயல்படுவது தெரிகிறது. இது குறித்து ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முறையற்ற வர்த்தகம், சேவை குறைபாடு, மருத்துவ சிகிச்சை, மன உளைச்சலுக்காக, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
-
கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி