லட்சுமிபுரம் அணைக்கட்டை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை

பொன்னேரி,:பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இதில், மழைக்காலத்தில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, பெரும்பேடு, தத்தமஞ்சி, காட்டூர் ஆகிய ஏரிகளுக்கு, கால்வாய் வழியாக கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது.

இதற்காக அணைக்கட்டின் இருபுறமும், தலா மூன்று என, ஆறு ஷட்டர்கள் உள்ளன. இந்த ஷட்டர்கள் உள்ள பகுதி மற்றும் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் கரைகளில் முள்புதர்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் இருப்பு குறித்து, அளவீடு செய்வதற்காக கருவிகள் உள்ள அறையை சுற்றிலும் முள் செடிகள் வளர்ந்துள்ளன.

ஷட்டர்கள் அருகே உள்ள கரைகளில் வளர்ந்துள்ள முள்செடிகளால், கான்கிரீட் கட்டுமானங்கள் சிதையும் நிலை உள்ளது. எனவே, பாதிப்புகள் அதிகரிக்கும் முன், அணைக்கட்டு பகுதியில் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement